சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு.. கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் சேவை நிறுத்தம்.. மக்கள் தவிப்பு
N.F.Rifka
admin

சென்னையில் இன்று மாலையில் திடீரென்று கடற்கரை - தாம்பரம் இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பணி முடித்து வீடு திரும்ப முடியாமல் ரயில் நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவையை தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கும் செல்ல மக்கள் இந்த ரயில் சேவையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மின்சார ரயில்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும். குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். காலை, மாலை வேளைகளில் தனியார், அரசு ஊழியர்கள், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் என்று ஏராளமானவர்கள் ரயில்களில் பயணம் செய்வார்கள். மாலை 5 மணி முதல் 6 மணி வரை சுமார் 50,000 ஆயிரம் பேர் வரை பயணிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் 8 முதல் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று மாலையில் வழக்கம்போல் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. அப்போது திடீரென்று சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் உயர் மின் அழுத்த கம்பியில் பழுது ஏற்பட்டது. இதனால் ரயில்களுக்கு மின்சார சப்ளை கிடைக்கவில்லை. இதனால் கடற்கரை - தாம்பரம் வழித்தடங்களில் இயங்கிய ரயில்கள் ஆங்காங்கே நின்றன. இதனால் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடு திரும்ப முடியாமல் ரயில் நிலையங்களில் தவித்தனர். மின்சார ரயில் சேவையை மீண்டும் இயக்குவதற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கையை தொடங்கினர். உயர்மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஊழியர்களின் திறம்பட செயல்பட்டு பழுதை சரிசெய்தனர். இதையடுத்து 40 நிமிடங்கள் கழித்து மீண்டும் மின்சார ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. அனைத்து ரயில்களும் 40 நிமிட தாமதத்தில் இயங்கி வருகிறது. இதனால் பயணிகள் ஓரளவு நிம்மதியடைந்துள்ளனர்.
